Chengaiulama.in

Thursday 4 January 2024

ஜும்ஆ பயான் 05/01/2023

தலைப்பு :

குடும்பத்திற்காக செலவு செய்தல்.

اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًا بَصِيْرًا‏

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  (அல்குர்ஆன் : 17:30)

இன்றைய அதிவேகமான தொழிநுட்ப வளர்ச்சி,  மனித வாழ்வை மிகவும் சீர்க்குழைத்துக்கொண்டிருக்கின்றது.

நன்மையை காட்டிலும் தீமை மிகைத்து காணப்படுகிறது.

நம் வாழ்வின் தீமைகளில் மிக முக்கியமானது சக மனிதனின் உரிமை பறிக்கப்படுவதும்,உரிமைமீறுதலுமே ஆகும்.

இதற்கு  அனுதினமும் கண்முன்னே நாம் காணும் உதாரணங்களே சான்றுகளாகும்.

#நாள்முழுக்க பாடுப்படும் கூலித்தொழிலியின் கூலியை குறைத்து கொடுக்கப்படுகிறது.

#ஆசிரியர்,இமாம்,நியாயமாக வேலை செய்பவர்களின் வருமானத்தை விடவும் அரசியல்வாதிகள்,கூத்தாடிகள்,சமூகவிரோதிகளிடம் பணபுழக்கம் அளவுக்கு மீறி உள்ளன.

உரிமைமீறல்களில் மிக மோசமானது குடும்ப உறுப்பினர்களான பெற்றோர்கள்,மனைவி மக்கள் உடன் பிறந்தோரின் உரிமைகளை மீறுதலே ஆகும்.

اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌  

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 4:34)

எத்தனையோ இஸ்லாமிய குடும்பங்களின் இன்றைய பரிதாப நிலை;

கணவன்மார்கள் தான் சம்பாதிப்பது தனக்கு மட்டுமே என வாழ்ந்து வருகின்றனர். வீட்டுச் செலவுக்கு பணம் தருவதில்லை.

இதனால் இஸ்லாமிய குடும்ப பெண்மணிகள் குடும்ப கஷ்டத்திற்காக குறைந்தஊதியத்திற்கு கூலிவேலைக்கோ அல்லது கம்பெனிக்கோ வேலைக்கு சென்று, வீட்டுச் செலவுகள் அனைத்தையும் ஏற்று, சிரமத்தோடு குடும்பத்தை  நடத்தி  வருகின்றனர். 

குடிகார கணவன்மார்களால், வருமானத்திற்கு நாதியில்லாமல் எத்தனையோ குடும்பங்களில் வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் அவலமும் தொடர்கதையாக உள்ளது.

சிலர் நல்ல வேலையில் இருந்தும், பணம் சம்பாதிக்கும் வெறியில், குதிரை ரேசுக்கு போவதும், சூதாடுவதுமாக குடும்பத்தை தவிக்கவிட்டுவிடுகின்றனர்.

குடும்ப செலவினங்கள் குடும்ப தலைவரின் பொறுப்பே ஆகும் என்பதை மேலுள்ள இறைமறை வசனம் வலியுறுத்துகின்றது.

ஆனால் இனறு தம் தாய்,தந்தையரின் கடமையை மறந்து நண்பர்களோடு செலவுசெய்வதை பெருமையாக கருதுபவர்களுக்கும்.

மனைவி,மக்களை கவனிக்காமல் ஊதாரித்தனமாக மனம் போனப்போக்கில் வாழ்பவர்களுக்கும் பின்வரும் நபிமொழி நல்லதோர் பாடமாகும்.

قَالَ اَلنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ : خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَ أَنَا خَيْرُكُمْ لِأَهْلِي.

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு சிறந்தவரே ஆவார், நான் என் குடும்பத்திற்கு சிறந்தவனாக இருக்கின்றேன்.

وقال صلى الله عليه وسلم: كفى بالمرء إثما أن يضيع من يقوت. رواه أحمد وأبو داود وغيرهما.

''தான் உணவளிக்க வேண்டியவருக்கு உணவளிக்காமல் இருப்பது ஒன்றே, மனிதனுக்கு பாவம் (செய்தவன்) என்பதற்கு போதுமாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி)  அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 294)

குடும்ப தலைவனின் பொருளாதாரத்தில் முழுஉரிமை பெற்றவர்கள் மனைவி,மக்கள்,பெற்றோர்களே ஆவார்கள்.இவர்களின் செலவினங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வது குடும்பதலைவரின் மீது கடமையாகும்.

குர்ஆனில்...

  وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ‌ 

 (ஷரீஅத்தின்) முறைப்படி அவர்களுக்கு உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; (அல்குர்ஆன் : 2:233)

ஒரு குடும்பத்தலைவர் குடும்பச் செலவுக்கு பணம் தராவிட்டால், அவருக்குத் தெரியாமல் ஒரு குடும்பத்தலைவி தனக்கும், தன் குழந்தைகளுக்கும் வேண்டியதை நியாயமான முறையில் எடுத்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு உண்டு. அவளின் மீது குற்றமேதுமில்லை என்பதையும் இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.

عن عائشة ـ رضي الله عنها: أن هند بنت عتبة قالت يا رسول الله إن أبا سفيان رجل شحيح وليس يعطيني ما يكفيني وولدي إلا ما أخذت منه وهو لا يعلم، فقال: خذي ما يكفيك وولدك بالمعروف. متفق عليه.

 ஒரு முறை ஹிந்த் பின்த் உத்பா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் “இறைத்தூதர் அவர்களே! என் கணவர் அபூசுய்யான் (ரலி) கருமியான மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்’ என்று கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

ஒரு குடும்பத்தலைவர் எவ்வாறு பொறுப்பாக தமது குடும்பத்தாருக்கு செலவு செய்யவேண்டும் என இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அவர் தம் குடும்பத்தாருக்கு செலவு செய்வதும் தர்மமே! நன்மையே! அறமே!

عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ : الْمُسْلِمُ إِذَا أَنْفَقَ نَفَقَةً عَلَى أَهْلِهِ وَهُوَ يَحْتَسِبُهَا فَهِيَ لَهُ صَدَقَةٌ". (مسند الدارمي، باب في النفقة علی العیال: ۳/۱۷۴۳، ط:دارالمغنی)

 ‘இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால், அதுவும் அவருக்கு தர்மமாக அமையும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி) 

ஊருக்கு வாரி வாரி வழங்கிவிட்டு, குடும்பத்தை அம்போ என்று விட்டுவிடக்கூடாது. ஊருக்கு வாரி வழங்கும் முன்பு தமது குடும்பத்தினருக்கு வழங்கிட வேண்டும். தர்மத்தை கூட முதலில் வீட்டிலிருந்து தான் தொடங்கிட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللَّهِ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ فِي رَقَبَةٍ، وَدِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ، أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ 

வீட்டாரிடமிருந்தே உன் தர்மத்தை தொடங்கு! என நபி (ஸல்) கூறினார்கள்’. 

"விட்டாரில் நீ செலவளிப்பதே கூலியால்  மிக உயந்தது"(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

வசதியுள்ளவர் தமது வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும் என்கிறது அருள்மறை...

لِيُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ‌ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهٗ فَلْيُنْفِقْ مِمَّاۤ اٰتٰٮهُ اللّٰهُ‌ لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتٰٮهَا‌ سَيَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا‏

தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.(அல்குர்ஆன் : 65:7)

وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رضي الله تعالى عنه قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا ذُو مَالٍ، وَلَا يَرِثُنِي إِلَّا ابْنَةٌ لِي وَاحِدَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: لَا، قُلْتُ: أَفَأَتَصَدَّقُ بِشَطْرِهِ؟ قَالَ: لَا، قُلْتُ: أَفَأَتَصَدَّقُ بِثُلُثِهِ؟ قَالَ: الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ. مُتَّفَقٌ عَلَيْهِ

உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. என்கிறது நபிமோழி.

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:" إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ"

இறைஉவப்பை நாடி நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்கு உமக்கு நன்மை கிடைக்கும்; நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவள உணவுக்கும் கூட நன்மையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்தார்கள்’. (நூல்: புகாரி)

குடும்பத்திற்குச்செலவு செய்வதன் சிறப்பை அறிந்து கொள்ள அபூதல்ஹா (ரலி) அவர்களின் தியாகத்தை எடுத்துச் சொல்கிற சம்பவம் நல்ல சிறந்த உதாரணம்.

عن إسحاق بن عبد الله بن أبي طلحة أنه سمع أنس بن مالك يقول : كان أبو طلحة أكثر أنصاري بالمدينة مالا من نخل ، وكان أحب أمواله إليه بيرحاء ، وكانت مستقبلة المسجد ، وكان رسول الله - صلى الله عليه وسلم - يدخلها ، ويشرب من ماء فيها طيب ، قال أنس : فلما نزلت لن تنالوا البر حتى تنفقوا مما تحبون قام أبو طلحة ، فقال : يا رسول الله إن الله يقول : لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وإن أحب أموالي بيرحاء ، وإنها صدقة لله أرجو برها وذخرها عند الله ، فضعها يا رسول الله حيث شئت ، قال : فقال رسول الله - صلى الله عليه وسلم - : بخ ذلك مال رابح ، ذلك مال رابح ، وقد سمعت ما قلت ، وإني أرى أن تجعله في الأقربين ، فقال أبو طلحة : أفعل يا رسول الله ، فقسمها أبو طلحة بين أقاربه وبني عمه .

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

“நீங்கள் நேசிக்கும் பொருட் களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்” என்ற (3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, “நீங்கள் நேசிக்கும் பொருட் களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்” எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் எனது மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே “அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் “ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்” எனக் கூறினார்கள்.

அதற்கு அபூதல்ஹா (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!” எனக் கூறிவிட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டுவிட்டார்.

குடும்பத்திற்காக செலவு செய்தலின் அவசியம்

ஒவ்வொரு முஸ்லிமும் தமது அன்றாட வாழ்வியல் செயல்முறைக்கு திருக்குர்ஆன் வழிகாட்டலையே பின்பற்ற வேண்டும். அதில் முக்கிய பங்கு வகிப்பது, வாழ்வாதாரத்துக்கு உணவு, உடை, உறைவிடம் என மனிதனின் முக்கியத் தேவை பொருளாதாரமாகும்.

اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًا بَصِيْرًا‏

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  (அல்குர்ஆன் : 17:30)


سَمِعَ أَبَا مَسْعُودٍ الْبَدْرِيَّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" نَفَقَةُ الرَّجُلِ عَلَى أَهْلِهِ صَدَقَةٌ "".

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் தன் குடும்பத்தினருக்காகச் செய்யவும் செலவும் தர்மமே ஆகும். 

இதை பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.     (ஸஹீஹ் புகாரி : 4006. )

மனைவி மக்களைக் கவனிப்பது கணவனுக்குக் கட்டாயக் கடமை. கடமையை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும். கூடுதலாக தர்மம் செய்த நன்மையையும் இறைவன் தருகிறான் என்பதைத்தான் நபியவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். அதே நேரத்தில் நமது குடும்பத்தைச் சாராத நபர்களில் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுத்தால் அதற்கு தர்மத்தின் நன்மை மட்டும்தான் கிடைக்கும். ஆனால் குடும்பத்திற்குச் செலவளித்தால் இரட்டை நன்மைகள் கிடைக்கிறது.

எனவே கணவன்மார்கள் செலவு செய்யும் போது அடிக்கடி தாங்கள் செலவு செய்வதைக் குத்திக்காட்டி, எடுத்தெறிந்து பேசிவிடக் கூடாது. ஏனெனில் அப்படி நமது செலவைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தால் நாம் இறைவன் சொன்னதற்காகச் செய்யவில்லை என்றாகிவிடும். மறுமையில் எந்த நன்மையும் கிடைக்காமல் போய்விடும் என்பதைக் கவனத்தில் கொண்டு குடும்பத் தலைவர்கள் செலவு செய்திட வேண்டும்.

தன்னிறைவு பெற்ற நிலையில் குடும்பத்தை விட்டுச்செல்லுதல்

عَنْ سَعْد ٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي وَأَنَا مَرِيضٌ بِمَكَّةَ، فَقُلْتُ لِي مَالٌ أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ "" لاَ "". قُلْتُ فَالشَّطْرُ قَالَ "" لاَ "". قُلْتُ فَالثُّلُثُ قَالَ "" الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً، يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ، وَمَهْمَا أَنْفَقْتَ فَهُوَ لَكَ صَدَقَةٌ حَتَّى اللُّقْمَةَ تَرْفَعُهَا فِي فِي امْرَأَتِكَ، وَلَعَلَّ اللَّهَ يَرْفَعُكَ، يَنْتَفِعُ بِكَ نَاسٌ وَيُضَرُّ بِكَ آخَرُونَ "".

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது„

நான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரித்து வந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரண சாசனம் செய்து விடட்டுமா? என்று கேட்டேன். அவர்கள், வேண்டாம் என்று பதிலளித்தார்கள். நான் பாதியை (மரணசாசனம் செய்துவிடட்டுமா)? என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். நான், (அப்படியென்றால்) மூன்றிலொரு பங்கை (நான் மரணசாசனம் செய்யட்டுமா)? என்று கேட்டேன். அதற்கவர்கள் மூன்றிலொரு பங்கா! மூன்றிலொரு பங்குகூட அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவு கொண்டவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் (அவர்களுக்காக) எதைச் செலவு செய்தாலும் அது நீங்கள் செய்த தர்மமே. எந்த அளவிற்கென்றால் நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் உணவும் கூட (தர்மமாகவே உங்களுக்கு எழுதப்படும்) அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கக்கூடும். அப்போது மக்கள் சிலர் உங்களால் பயன் அடைந்திடவும்., வேறு சிலர் உங்களால் இழப்புக்குள்ளாகவும் கூடும் என்று சொன்னார்கள்.        (ஸஹீஹ் புகாரி : 5354. )

சேமிப்பின் அவசியம்

ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது அவசியம்.

சேமிப்பு எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் பணமாக, தங்கமாக, நிலமாக என்று எது சரிப்பட்டு வருகிறதோ லாபம் என்று தோன்றுகிறதோ அந்த வகையில் உங்கள் சேமிப்பை தொடரலாம்.

சில நேரங்களில் சேமிப்பிற்காகப் பணம் ஒதுக்குவது கடுப்பாகவே இருக்கும், அதுவும் பணப் பற்றாக்குறையான சமயங்களில்

இதுக்கு வேற மாசாமாசம் கொடுக்க வேண்டியதாக இருக்குதே! என்று எரிச்சலாக இருக்கும்.

நமக்கு இந்தப்பணம் மொத்தமாகக் கிடைக்கும் போது தான், இதனுடைய அருமை புரியும்.

قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًا‌ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِىْ سُنْبُلِهٖۤ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَاْكُلُوْنَ‏

பஞ்சத்தை எதிர்கொள்வதற்காக யூசுப் (அலை) அவர்களின் திட்டமும் இதனையே சுட்டிநிற்கிறது. அவர் தொடராகப் பயிரிட்டார். வளமான ஏழு வருடங்களின் அறுவடையை சேமித்தார். சிக்கனமாகவே பயன்படுத்தினார். 'நீங்கள் ஏழு வருடங்களுக்குத் தொடராக விவசாயம் செய்வீர்கள். உண்பதற்காக பயன்படுத்தும் சிறிய பகுதியைத் தவிர பெரிய பகுதியை அறுவடை செய்யாது கதிர்களிலே விட்டு விடுங்கள்' (12.47)

அறுவடை செய்யாது கதிர்களிலே விட்டு விடுதல் என்பது சேமிப்பதற்கும், பஞ்சமான காலத்தில் தேவைப்படும் போது பயன்படுத்வதற்குமான உத்தியாகும்.

وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًـا  فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا   رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌‌  وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ‌  ذٰ لِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا ‏( 18:82) 

சூறா கஹ்பில் மூஸா (அலை) அவர்களும் அறிவுள்ள ஒரு நல்ல மனிதரும் சென்ற பயணத்தின் போது ஒரு சிறந்த பெற்றார் தனது பிள்ளைகளின் நலன் நாடி மறைத்து சேமித்து வைத்திருந்த புதையலை பற்றிய விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கைபரில் கிடைத்தவை மூலம் ஒரு வருடத்துக்கு குடும்பத்துக்கு தேவையானவைகளை சேமித்து வைத்திருந்தார்கள்.

அன்னார் பனூ நழீர் கோத்திரத்தின் பேரீச்சம் பழங்களை விற்பனை செய்வார்கள். அதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுப் பொருட்களை சேமிப்பார்கள்.

எனவே சேமிக்கப் பழகுங்கள்.

சேமிப்பது சிரமமா?

சேமிப்பது கடினம் என்று நினைக்கிறார்கள், இல்லவே இல்லை.

சேமிக்க ஆரம்பித்தால் நமக்கே தெரியாமல் பணம் சேர்ந்து விடும். சேமிக்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது.இதில் நமக்கு எது சரிப் பட்டு வருதோ அதில் நாம் இணையலாம்.

முதலில் பணம் கட்ட சிரமமாக இருக்கும், பின்னர் அது அப்படியே நமக்கு ஒரு பழக்கமாகி, சிரமமில்லாத ஒன்றாகி விடும்.

ஒரு நாள் பார்த்தால், அட! இவ்வளவு சேமித்து விட்டோமா! என்ற வியப்பாக இருக்கும்.பின்னர் ஏற்படும் பெரிய செலவிற்கு இந்தச் சேமிப்பு மிக உதவியாக இருக்கும்.

திட்டமிடுதல்.

وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

 சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(அல்குர்ஆன் : 3:159)

திட்டமிடுதல் ரொம்ப முக்கியம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் எதுவுமே சரியாக வராது.

எனவே, நமது மாத பட்ஜெட் என்ன? அதில் எப்படி  செலவுகளைப் பிரிக்கலாம் என்பதை திட்டமிட வேண்டும்.

இதற்காகத் திட்டமிடும் போதே, நமது அனைத்து செலவிற்கும் சேர்த்து திட்டமிட வேண்டும், அப்போது தான் இறுதியில் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

சம்பளம் வந்த முதல் இரண்டு வாரம் மகிழ்ச்சியாகவும் கடைசி இரண்டு வாரம் நெருக்கடியாகவும் ஆவதற்கு திட்டமிடுதல் இல்லாமையே காரணம்.

புதுச் செலவை என்ன செய்வது?

திட்டமிட்டுத் தான் செய்கிறோம் ஆனால், சில நேரங்களில் திட்டமிடுதலில் இல்லாத செலவுகளும் திடீர் என்று வந்து விடுகின்றன, அப்போது என்ன செய்வது?

என்ன தான் திட்டமிட்டாலும், சில நேரங்களில் நம்மையும் மீறி புதிய அத்தியாவசிய செலவுகள் [நண்பர்கள் திருமணம், மருத்துவம், பரிசுப்பொருள்] வந்து விடும்.

இந்த நேரங்களில் நமது சேமிப்பில் இருந்து எடுக்கலாம் அல்லது நண்பர்களிடையே கடனாகப் பெற வேண்டியது இருக்கும்.

இது போல் என்ன செலவானாலும் அடுத்த மாதத்தில் குறைக்கக்கூடிய செலவுகளில் கையை வைத்துத் தான் ஆக வேண்டும், அப்போது தான் சமாளிக்க முடியும், இல்லை என்றால் கடன் என்பது தொடர் கதையாகி விடும்.

நம்மால் திரும்பக் கொடுக்க முடியும் என்றால் மட்டுமே கடன் வாங்குவது  நல்லது.

ஆசைப்படலாமா?

என்றுமே வரவுக்கு மீறிச் செலவு செய்யவே கூடாது, இவ்வாறு செய்யப்படும் செலவுகளே நம்மைச் சிக்கலில் மாட்டி விடும்.

ஆசைப்படலாம்! ஆனால், அதற்குண்டான நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது சம்பாதிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.

அதாவது நம்மில் பெரும்பாலனர்கள் வாங்கும் சம்பளமே போதும்! என்று அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சிக்கவே மாட்டார்கள்.

காலம் முழுவதும் ஒரே நிலையிலிருந்து, அதே நிலையிலேயே தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வார்கள்.

எப்பப்பார்த்தாலும் பஞ்சப்பாட்டாகவே இருக்கும். இதை எப்படி கடந்து வருவது?

முதலில் நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதைக் கண்டறிய வேண்டும்.

இதற்கு முதல் எதிரி சோம்பேறித்தனம், முயற்சியின்மை. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால், கடுமையா உழைக்கணும்.

وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰى‏

அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.(அல்குர்ஆன் : 53:40)

எனவே, எப்போதுமே ஒரு நிலையில் இருப்பதை தொடராமல், அடுத்த கட்டத்திற்கு செல்வது எப்படி? என்பதை யோசித்து அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபடலாம்.

வீண் விரயம் வேண்டாம்.

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 17:27)

ஆகவே, “நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவே இருக்கின்றனர் என்று ஊதாரித்தனமாக செலவு செய்பவர், ஷைத்தானின் சகோதர ராவார்” என ஊதாரியை ஷைத்தானோடு இணைத்து திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது.(நூல்: புகாரி)

அல்லாஹ் நம் குடும்பத்திற்காக நிரந்தரமாக செலவு செய்யும் பாக்கியத்தையும் செல்வத்தையும் தந்தருள்வானாக! ஆமின்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


No comments:

Post a Comment