Wednesday 15 May 2024

ஜூம்ஆ பயான் 17/05/2024

ஹாஜிகளின் கவனத்திற்கு...

ஹஜ் எனும் கடமை.

ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில்  ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகள் போன்றே புனித குர்ஆன், ஹதீஸ்  மற்றும் "இஜ்மாஃ" உம்மத்தின் ஒருமித்த கருத்து ஆகியவற்றால் ஹஜ் கடமை நிரூபிக்கப்பட்டுள்ளது; 

எனவே, எவர் ஹஜ் கடமையை மறுக்கிறாரோ அவர் காஃபிராவார். 

 ‌ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 3:97) 

இந்த வசனம் ஹஜ் கடமையைப் பற்றி உறுதிப்படுத்துகிறது.

அண்ணலம் பெருமானார்ﷺஅவர்கள் கூறினார்கள்;

بُنِیَ الإِسْلاَمُ عَلَی خَمْسٍ: شَھَادَةِ أَنْ لاَ إِلَہَ إِلَّا اللہُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللہِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِیتَاء ِ الزَّکَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ“․(بخاری شریف، حدیث نمبر:۸)

ஐந்தின் மீது இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது.

1,வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை மேலும் முஹம்மது நபி ﷺஅவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள்என்று சாட்சி சொல்வது.

2,தொழுகையை நிலை நாட்டுவது.

3,ஜகாத் கொடுப்பது.

4 ,ஹஜ் செய்வது

5,ரமலானில் நோன்பு நோற்பது.

(நூல்;புகாரி)

புனித ஹஜ்

புனித ஹஜ் யாத்திரை,வசதி வாய்ப்புள்ள முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் மேற்கொள்வது فرض தலையாயக் கடமையாகும்.

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ஹஜ் கடமையானது. அவ்வருடம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் ஹழ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி)அவர்களின் தலைமையில் ஒரு குழுவை ஹஜ்ஜுக்கு அனுப்பினார்கள்.

ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு கண்மணி நாயகம் ﷺ அவர்கள் ஹஜ் செய்ய விரும்பி,தங்களோடு அதிகமான முஸ்லிம்கள் ஹஜ் செய்ய வேண்டும் என்பதற்காக பொது அறிவிப்பு செய்தார்கள். 

இதனால் நாயகம்  ﷺஅவர்களை பார்த்து ஹஜ் செய்யும் வாய்ப்பும்,அதனுடைய கடமைகளையும்,ஒவ்வொரு இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் செய்யக்கூடிய அமல்களை அனுபவப்பூர்வமாக கற்றுக் கொள்ளும் பாக்கியம் நபியோடு ஹஜ் செய்தவர்களுக்கு கிடைத்தது.

இந்த ஹஜ்ஜில் சஹாபாக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபியிடம் ஹஜ் சம்பந்தமாக பல்வேறு மஸ்அலாக்களை கேட்டு அறிந்து கொண்டார்கள்.

நபி ﷺஅவர்களே ஹஜ் சம்பந்தமான மஸ்அலாக்களை தம்மிடம் கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வமூட்டினார்கள்.

«لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ، فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ»

உங்களின் ஹஜ் சட்டங்களை முழுமையைக் பி(-ப)டித்து கொள்ளுங்கள் . ஏனெனில் மீண்டும் ஒரு முறை ஹஜ் செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டுமா என்பது தெரியாது என நபி   ﷺஅவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

 (ஸஹீஹ் முஸ்லிம்.அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள் -)

சங்கைப்பொருந்திய சஹாபாக்கள் நபி  ﷺஅவர்களிடம் ஹஜ்ஜின் சட்டங்களை முழுமையாக கற்று,பாதுகாத்து அதனை இந்த உம்மத் கியாம நாள் வரை பயன்பெறும் விதத்தில் முழுமையாக எத்திவைத்து சென்றுவிட்டனர்.

எனவே ஹஜ் செல்லக்கூடிய ஹாஜிகள்,ஹாஜிமாக்கள் ஹஜ்ஜின் மஸ்அலாக்கள்,அமல்கள்,ஹஜ்ஜில் அவசியமானவற்றை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.   

ஹஜ்ஜில் அனைத்து விதமான பாவங்களை விட்டும்,தவறான,வெறுப்பான சொல்,செயல்களை விட்டும் தவிர்ந்து பேணிக்கையாக இருப்பது அவசியமாகும்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பெருமக்கள் பயன்பெறும் விதத்தில் அறிஞ்சப்பெருமக்கள் ஹஜ் சம்பந்தமான சிறிய,பெரிய பல கிதாபுகளை இலகுவான விதத்தில்  எழுதி வைத்துள்ளனர்.

அதனை ஹாஜிகள்  நன்கு படித்து மனனமிட்டு,அதனை கையோடு எடுத்துச் செல்வது பயனுள்ளதாக அமையும்.

புனித ஹஜ்,வாழ்நாளில் ஒரு முறையேனும் தமக்கு செய்ய வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதி,அதில் எந்தவிதமான குறைபாடும் நிகழாமல் கவனமாக இருக்க வேண்டும்.

ஹஜ்ஜின் நிபந்தனைகள்

1.இஸ்லாம்

காபிருக்கு கடமையில்லை.அவனிடமிருந்து இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டன்.

2.புத்தியுள்ளவனாயிருத்தல்

«பைத்தியகாரர்களுக்கு ஹஜ் கடமையில்லை, மூன்று நபர்கள் குற்றவாளியாக கணிக்கப்பட மாட்டார்கள் :

 1.தூங்குபவர் எழும் வரை, 

2.சிறுவர்கள் பருவ வயதை அடையும் வரை.

3.பைத்தியகாரன் புத்தி தெளியும் வரையாகும்.

3.பருவ வயதை அடைந்திருத்தல்.

சிறுவர்கள் மீது ஹஜ் கடமையில்லை,ஆனால் செய்தால் ஏற்றுக்கொள்ளப்படும். என்றாலும் கடமையான ஹஜ்ஜை செய்தவராக கணிக்கப்படமாட்டார், அது அவருக்கு சுன்னத்தாக கணிக்கப்படும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு பெண்மணி தம் குழந்தையை உயர்த்திக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என்று விடையளித்தார்கள்.                  (.ஸஹீஹ் முஸ்லிம் : 2597. )

சிறுவர் ஹஜ் செவதாக இருந்தால் அவர் இஹ்ராம் ஆடையை அணிய வேண்டும்.

4. சுதந்திரமானவனாக இருத்தல்

அடிமையின் மீது கடமையில்லை,


5. சக்தி பெற்றிருத்தல்

பயணம் செய்வதற்கு  ஒரு மனிதனுக்கு தேவையான உணவு, குடிபானம், ஆடை போன்றவை போதுமான பணம், (ராஹிலா : மனிதன் பயணம் செய்ய கூடிய கார், விமானம், கப்பல் போன்ற) வாகன வசதிகள் இருக்க வேண்டும்.

இன்னும் அதற்குச் செல்வதற்குரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்க வேண்டும்.

 ‌ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

இன்னும் பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 3:97)

6.பெண்ணுக்கு மஹ்ரமான ஆண் துணை இருத்தல்.

நபியவர்கள் பிரசங்கம் செய்ய நான் கேட்டதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

«எந்த பெண்ணும் மஹ்ரம் இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள்:

عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ، وَلاَ تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلاَّ وَمَعَهَا مَحْرَمٌ "". فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً. قَالَ "" اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ "".

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

'ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்' என்று கூறினார்கள். 

(ஸஹீஹ் புகாரி : 3006. )

“எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.” ( முஸ்லிம்)

ஹஜ் பயணம் என்பது மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயணம் என்பதால் இந்த ஹதீஸின் படி ஒரு பெண் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்பது தெரிகிறது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றித் தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறப்படுகின்றது.

இதற்குத் தவறான வியாக்கியானம் செய்யும் சில அறிஞர்கள் “நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்!” என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா? என்ற வாதப் பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் “மஹ்ரம்” என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி(ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதே நாம் சரியான கருத்தாகக் கொள்ளத் தக்கதாகும்.

தல்பியாவை அதிகப்படுத்துதல்

.لًبّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ  وَالْمُلْكَ  لاشَرِيْكَ  لَك

   “நான் வந்திருக்கிறேன். எனது இறைவனே! வந்திருக்கிறேன். உனக்கு இணை துணை கிடையாது. நான் வந்திருக்கிறேன். நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானவை. அருட்கொடைகள் அனைத்தும் உன்னுடையவை. எல்லாவிதமான ஆட்சிகளும் உனக்கே உரித்தானவை. உனக்கு இணை எவரும் கிடையாது.”

  عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ فَأَقْصَعَتْهُ ـ أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا "".

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர், தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்; அது அவரின் கழுத்தை முறித்துவிட்டார். (அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்: ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா (லப்பைக் அல்லஹும்ம லப்பைக்...) சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்' எனக் கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி : 1266. )

ஹாஜிகளின் கனிவான கவனத்திற்கு...

ஹாஜிகள் தங்களின் ஹஜ்ஜை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கும்,பூரணமான நன்மைகளை பெறுவதற்கும் சிலவற்றை கடைபிடிப்பது அவசியமாகும். 

1-எண்ணங்களை (நிய்யத்)சீராக்கிக் கொள்க!

மனத்தூய்மை

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ 

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.

பெயர்.புகழ்.பட்டம் சம்பாதிப்பதற்கோ. தங்கம். டீவீ. பேரிச்சம் பழம் போன்ற பொருட்கள்  வாங்குவதற்கோ ஹஜ் அல்ல. அல்லாஹ்வின் திருப்தியை நாடி செல்ல வேண்டும்.

பாக்கியம் நிறைந்த ஹஜ் இறைக் காதலின் வெளிப்பாடாக இறைப் பொருத்தத்தை மாத்திரம் நாடி மேற்கொள்ளப்படும் புனிதப் பயணமாகும்.சில லட்சங்களை செலவு செய்து,பல அசௌகரியங்களை சகித்துக் கொண்டு மேற்கொள்ளும் ஹஜ்ஜை சில அற்ப காரணங்களுக்காக வீணடித்து விடக்கூடாது.ஊரில் தம்மை "ஹாஜியார்" என்று புகழாரம் சூட்ட வேண்டும் என்கிற ஹாஜி பட்டத்திற்காகவோ வேறு சில காரணங்களுக்காகவோ ஹஜ் செய்வதை தவிர்த்து இறை பொருத்தத்தை மாத்திரம் நாடி ஹஜ் செய்ய வேண்டும்.

 قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم: ‏يأتي على الناس زمان يحج أغنياء أمتي للنزهة وأوسطهم للتجارة وقراؤهم للرياء والسمعة وفقراؤهم للمسألة " ‏

கண்மணி நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்:மக்களின் மீது ஒரு காலம் வரும் என் உம்மத்தில் செல்வந்தர்கள் சுற்றுலாவிற்காகவும்,நடுத்தரவர்க்கத்தினர் வியாபாரத்திற்காகவும்,காரிகள் பகட்டுப்பெருமைக்காகவும்,ஏழைகள் பிச்சை எடுப்பதற்காகவும்  ஹஜ் செய்வார்கள்.

2-ஹாஜிகள் ஹஜ் பயணத்தில் இமாம் ஜமாஅத்தோடு தொழுவதற்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும்.

பொதுவாகவே ஹாஜுகள் இமாம் ஜமாஅத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை.தொழுகையில் பேணிக்கையாக இருப்பவர்களும் இது விஷயத்தில் அலட்சியப் போக்கை கையாளுகிறார்கள்.

3-பெண் ஹாஜிமாக்கள் ஹஜ் பயணம் முழுக்க  ஃபர்தா விஷயத்தில் மிகுந்த முக்கியத்துவத்தோடு நடந்து கொள்ளவதே சிறப்பாகும். 

பெண்கள் ஹஜ்ஜில் இஹ்ராம் அணிந்து விட்டால் முகத்தை மறைக்கக் கூடாது என்பதற்காக ஃபர்தாவில் பொடுபோக்காக இருந்து விடக்கூடாது.

அன்னை ஆயிஷா (ரலி)அவர்களின் ஹஜ்ஜில் ஃபர்தா பேணிக்கை பெண்களுக்கு சிறந்த  முன்னுதாரணம் ஆகும். 

’’عن عائشۃؓ قالت: کان الرکبان یمرون بنا ونحن مع رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم محرمات ، فإذا جاوزوا بنا سدلت إحدانا جلبابَھا من رأسھا علٰی وجہہا فإذا جاوزونا کشفناہ ، رواہ ابوداؤد وابن ماجۃ۔‘‘ (مشکوٰۃ،ص:۲۳۶، طبع: قدیمی کتب خانہ)

அன்னை ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்;நாங்கள் (உம்மாஹாத்துல் முஃமினீன்)நபி  ﷺஅவர்களோடு ஹஜ் பயணத்தில் (முகத்தை மறைக்காமல்) இஹ்ராமில் இருந்தோம்.யாரேனும் எங்களை கடந்து சென்றால் நாங்கள் ஏதேனும் மறைப்பால் எங்கள் முகத்துக்கு நேராக வைத்துக் கொள்வோம்.அவர்கள் எங்களை கடந்து சென்றதும்.மறைப்பை நீக்கிவிடுவோம்.   

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இஹ்ராமில் முகத்தில் துணிப்படாமல்

முகத்தை மறைப்பதற்கு கேப் போன்ற வடிவில் ஃபர்தா உள்ளது,பெண்கள் பேணிக்கைகாக அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அறிஞ்சப்பெருமக்களில் கூற்றாகும்.


4-மக்கா முகர்ரமாவில் பெண்கள் தொழுவதற்கான தனி ஸஃப்கள் இருக்கும்.அதனை விடுத்து சில பெண்கள் ஆண்கள் வரிசையில் நிற்கின்றனர்.இது ஷரிஅத்தில் தடுக்கப்பட்டதாகும். பெண்கள் இதனை அவசியம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

5-ஒரு முக்கியமான சட்ட சிக்கல் சில வருடங்களாக தொடர்கின்றது.அதாவது மக்கா,மதினா இரண்டு ஹரம்களிலும் ஜும்ஆவிற்கு  ஜவாலுக்கு முன்பே பாங்கு சொல்லப்படுகிறது.சிலர் இந்த பாங்கிற்கு பின்னால் சுன்னத் தொழ ஆரம்பித்து விடுகின்றனர்.ஆனால் இந்நேரத்தில் எந்தத்தொழுகையும் தொழுவது தடைச்செய்யப்பட்டுள்ளது. 

۔ ’’عن عقبۃ بن عامرؓ قال: ثلٰث ساعات کان رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم ینہانا أن نصلی فیہن وأن نقبر فیہن موتانا حین تطلع الشمس بازغۃ حتّٰی ترتفع وحین یقوم قائم الظہیرۃ حتی تمیل الشمس وحین تضیف الشمس للغروب حتی تغرب ، رواہ مسلم۔‘‘                 (مشکوٰۃ،ص:۹۴،طبع:قدیمی کتب خانہ)

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள்  தடை விதித்திருந்தார்கள். அவையாவன:

1- சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை,

2- ஒருவர் (வெயிலில்) நிற்கும்போது நிழல் விழாத நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கில்) சரியும்வரை.

3- சூரியன் மறையத் தொடங்கியதிலிருந்து நன்கு மறையும்வரை.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி)

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَحَرَّوْا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا فَإِنَّهَا تَطْلُعُ بِقَرْنَيْ شَيْطَانٍ

சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ நீங்கள் தொழுவதற்காகத் தேர்வு செய்யாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள்  கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)அவர்கள் )

எனவே ஹாஜிகள் ஜும்ஆவில் முதல் பாங்கிற்கு பின்னால் எந்தவிதமான சுன்னதோ,நஃபிலோ தொழக்கூடாது.அது எச்சரிக்கப்பட்டதும்,ஷரிஅத்தில் தடுக்கப்பட்டதும் ஆகும்.

6-தற்காலத்தில் பொதுவாக ஹாஜிகள் மினாவின் தங்குவதை அவசியமில்லை என தவறாக விளங்கி வைத்துள்ளனர்.சில ஹஜ் குரூப்புகளில் ஹாஜிகளை வழி நடத்திச் செல்பவர்கள், ஹாஜிகளிடம் "நீங்கள் கல்லெறிவதற்காக மட்டும் மினாவிற்கு சென்றால் போதுமானது மற்ற நேரங்களில் அங்கு செல்லாமல் உங்கள் அறைகளில் தங்கிக் கொள்ளலாம்" என்று கூறுகின்றனர்.

இன்னும் சிலர் இரவு தங்குவதற்காக மினாவிலிருந்து  மக்காவில் தங்களின்  அறைக்கு வந்து விடுகின்றனர்.

ஆனால் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் ஹஜ்ஜின் போது மக்காவிற்கு தவாஃப் செய்வதற்காக மட்டும்தான் வந்திருக்கிறார்கள்.மூன்று தினங்கள் மினாவில் தான் தங்கினார்கள்.

நம் இமாம் இமாமுனா அபூஹனீஃபா (ரஹ்)அவர்களிடம் 'மினாவில் தங்குவது سنت مؤکدہ வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஆகும்"

ஏனைய மற்ற இமாம்களிடம்  மினாவில் தங்குவது واجب வாஜ்பாகும்.

அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் ஹஜ்ஜில் மினாவில் தங்காதவர்களை கண்டித்திருக்கின்றார்கள். 

மௌலானா முஃப்தி முஹம்மது அர்ஷத் காஸிமி அவர்கள் தங்களின்

 ’’رسول اللہ ﷺ کا طریقۂ حج‘‘

"நபி ﷺஅவர்களின் ஹஜ்ஜின் முறைகள்"எனும்  உர்து கிதாபில் மினாவில் தங்குவது சம்பந்தமாக பல்வேறு ரிவாயத்களை தொகுத்து எழுதியுள்ளார்கள்.அவற்றில் சில...

1-அன்னை ஆயிஷா (ரலி)அவர்களின் ரிவாயத்:நபி  ﷺ அவர்கள் அய்யாமுத் தஷ்ரீக்வுடைய நாட்களில் மினாவில் தங்கினார்கள்.

 (ابوداؤد،ص:۲۷۱، اعلاء السنن، ص:۱۸۹)

2-அப்துர் ரஹ்மான் இப்னு ஃபரூக் (ரஹ்)அவர்களின் ஒரு ரிவாயத்:நபிﷺஅவர்கள் மினாவில் இருந்தார்கள்.அங்கு தங்கினார்கள்.

 (اعلاء السنن،ص:۱۹۰) 

3-இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: அகபாவில்(மக்கா எல்லைக்குள்) யாரும் தஷ்ரீக் நாட்களைக் கழிக்கக் கூடாது. 

4-ஹஸ்ரத் உமர் ஃபாரூக் (ரலி)அவர்கள் மக்கள் மினாவில் தங்காமல் விட்டுவிடுவதை கண்டித்து வந்தார்கள்.

  (فتح القدیر، ص:۵۰۲) 

 5-இப்னு அபி ஷைபாவில் உள்ளது

அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் அகபாவில் (கல்லெறியும் தினங்களில்)எவரும் மக்கா எல்லையில் தங்குவதை தடை செய்தார்கள்.(فتح القدیر) 

6-அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் மினாவுடைய நாட்களில்

மக்கா முகர்ரமாவில் இரவு தங்குவதை தடை செய்தார்கள். 

 (فتح القدیر، ص:۵۰۲)

இந்த அறிவிப்புக்களை தொகுத்து விட்டு நூலின் ஆசிரியர் முஃப்தி சாஹிப் அவர்கள் எழுதுகிறார்கள்:

ஹாஜி பிறை 10 காலை முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு வரும் அவர், இப்போது 12 அல்லது 13ம் தேதி வரை மினாவில் இருப்பார். 4 நாட்கள் கடந்து பிறை 8 அன்று மக்காவில் இருந்து வந்து அரஃபாத் செல்வதற்கு முந்தைய நாள் மினாவில் தங்கினால். இவை மினாவின் 5 நாட்கள் ஆகும் , இந்த நாட்களை மினாவில் கழிப்பது சுன்னதே முஅக்கதா வாகும்.

இந்த நாட்களில் மக்காவில் கூட வேறு எந்த இடத்திலும் இரவில் தங்குவது சரியல்ல.

நபி ﷺஅவர்கள் மினாவில் தங்குவதை வலியுறுத்தி கூறியுள்ளார்கள்.

நபி ﷺ அவர்கள் இரவில் மக்கா முக்கரமாவிற்கு தவாஃப் செய்ய சென்றாலும்,இரவு தங்க மினாவிற்கு வந்து விடுவார்கள். 

7-அதே போல் பிறை 10 அல்லது 11 ஆகிய தினங்களில்  தவாஃபே-ஜியாரத் சென்றாலும், தவாஃப் முடித்துவிட்டு மினாவுக்குத் திரும்பி வந்து மினாவில் இரவு தங்க வேண்டும்.

"ஷரஹ் லுபாப்" என்கிற கிதாபில்

’’ولایبیت بمکۃ ولا فی الطریق لأن البیتوتۃ بمنٰی لیالیہا سنۃ عندنا واجبۃ عند الشافعیؒ۔‘‘                                                     (شرح لباب،ص:۲۳۵)

8-ஹிதாயாவில் "மினா அல்லாத மற்ற இடங்களில் இரவு தங்குவதை மக்ரூஹ் என்று எழுதப்பட்டுள்ளது.

ولایکرہ أن لایبیت بمنٰی لیالی الرمی لأن النبی علیہ الصلٰوۃ والسلام بات بمنٰی وعمر رضی اللّٰہ عنہ کان یؤدب علٰی ترک المقام بھا۔‘

9-இனாயா என்கிற கிதாபில் எழுதப்பட்டுள்ளது:கல்லெறிதல் என்கிற ஹஜ்ஜினுடைய கிரியைகளில் முக்கியமான கிரியை இலகுவாக்குவதற்காக மினாவில் இரவு தங்குவதை வலியுறுத்தப்பட்டுள்ளது.

(عنایہ علی الفتح،ص:۵۰۱)

10-ஜுஸ்வு ஹஜ்ஜத்துல் விதாஃ என்கிற கிதாபில் எழுதப்பட்டுள்ளது:

பெரும்பான்மையான உலமாப்பெருமக்களிடம் மினாவில் தங்குவது வாஜிப் ஆகும்.

இமாமுனா அபுஹனீஃபா (ரஹ்)அவர்களிடம் சுன்னதே முஅக்கதா ஆகும்.

(حجۃ الوداع،ص:۱۷۲)

11-தஹாவியில் எழுதப்பட்டுள்ளது:அய்யாமுத்தஷ்ரீக் உடைய நாளில் மினாவில் தங்காமல் இருப்பது மக்ருஹே தஹ்ரீம் ஆகும்.

’’دلالۃ الأثر علٰی لزوم المبیت بمنٰی فی لیالیہا ظاھرۃ أن لفظ ظاہر الہدایۃ یشعر بوجوبہا عندنا۔‘‘ ( اعلاء السنن،ص:۱۹۰)  

ஹாஜிகளுக்கு ஓர் வேண்டுகோள்!

கண்மணி நாயகம்  ﷺ அவர்கள்,சஹாபாப்பெருமக்கள்,தாபியீன்கள்,நல்லோர்களான நம் முன்னோர்கள் எவ்விதத்தில் ஹஜ் செய்தார்களோ அதுபோன்றே நாமும் ஹஜ் செய்ய முயற்சிக்க வேண்டும்.

உங்கள் சுய விருப்பு,வெறுப்புக்காக  ஒவ்வொரு அமலிலும் உங்கள் சுயஎண்ணங்கள்,கருத்துக்களின் படி நீங்கள் செயல்பட ஆரம்பித்தால் ஹஜ்ஜின் புனிதம் கெட்டுவிடும்.

ஆகையால் ஹாஜிகள் எச்ரிக்கையோடு ஹஜ்ஜின் செயல்களில் புதுமைகளைப் புகுத்துவதைத் தவிர்த்து கொள்ள வேண்டும்.

கண்மணி நாயகம்  ﷺ அவர்கள்,சஹாபாப்பெருமக்கள் எவ்விதம் ஹஜ் செய்ய கற்றுத் தந்தார்களோ அவ்விதமே ஹஜ் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கிடுவானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



Thursday 22 February 2024

ஜும்ஆ பயான் 23/02/2024

ஷபே பராஅத்...

அருள் மழைப்பொழியும் இரவு.

சங்கைக்குரிய ஷஃபான் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் எட்டாம் மாதம் ஆகும்.இம்மாதத்தின் மகத்துவத்தையும்,சிறப்புகளையும் பற்றி நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் பல நபி மொழிகள் பகன்றுள்ளார்கள்.

ஒரு நபி மொழியில்...

الشعبان شهری

"ஷஃபான் என்னுடைய மாதமாகும்"என நம் கண்மணிﷺ நாயகம் அவர்கள் கூறி அதன் சிறப்பை உணர்த்தியுள்ளார்கள்.

இன்னொரு அறிவிப்பில்...

شعبان شهري وشهر رمضان شهر الله تعالى

"ஷஃபான் என்னுடைய மாதமாகும்,ரமலான் அல்லாஹுடைய மாதமாகும்"(الجامع الصغير، رقم الحديث 4889)

ஹழ்ரத் துன் நூனுல் மிஸ்ரி(ரஹ்)அவர்கள் எழுதுகிறார்கள்; ரஜப் விதைகளை விதைக்கும் மாதம், ஷபான் பாசனம் பாய்ச்சும் மாதம், ரமலான் அதன் பழங்களை உண்ணும் மாதம்.

சங்கைக்குரிய ஷஃபான் மாதம் மேன்மையையும், சிறப்புக்களையும் தாங்கி இருப்பதற்கு,இம்மாதத்தில் உள்ள மேன்மைக்குரிய 15 ஆம் நாள் இரவு மிக முக்கிய காரணமாகும்.

இவ்விரவு அல்லாஹ்வின் அருளையும் பரக்கத்தையும்,சிறப்பையும் தாங்கியுள்ள இரவு ஆகும்.

இதற்கு அரபியில் نصف شعبان "நிஸ்ஃபு ஷஃபான் இரவு" எனப்படும்.

பராஅத் இரவு என்றால் என்ன?

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏

மாதம் பிறை 15ம் இரவுக்கு லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), லைலத்துல் பராஅத் விடுதலை பெறும் இரவு) என்றெல்லாம் கூறப்படும்.

அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக இமாம் இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள். பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.

ஷபே பராஅத்திற்குள்ள வேறு சில பெயர்கள்.

இமாம் கஸ்ஸாலி(ரஹ்)அவர்களின் பிரபல்யமான "முகாஷஃபதுல் குலூப்"எனும் நூலில் இவ்விரவுக்கு வேறு சில பெயர்களையும் குறிப்பிடுகிறார்கள்.

لیلۃ التکفیر

பாவங்களுக்கு பரிகாரமாகும் இரவு.

شب حیات

ஜீவனுள்ள இரவு.

شب مغفرت

பிழையைப்பொறுத்தருளும் இரவு.

شب آزادی

நரக விடுதலை வழங்கும் இரவு.

لیلۃ الشفاعۃ (شب شفاعت)

சிபாரிசு செய்யும் இரவு.

لیلۃ القسمہ والتقدیر

களா கத்ரை நிர்ணயிக்கும் இரவு.

இவ்விதமே இமாம் கஷ்ஷாஃப்(ரஹ்)அவர்கள் இவ்விரவுக்கு நான்கு பெயர்களை குறிப்பிடுவார்கள்.

لیلۃ المبارکہ

பரகத் பொருந்திய இரவு

لیلۃ البراۃ

நரக விடுதலை வழங்கும் இரவு.

لیلۃ الصک

விதி நிர்ணையிக்கப்டும் இரவு என்பதால் "சீட்டு வழங்கப்படும் இரவு"

لیلۃ الرحمہ

அருள் மழை பொழியும் இரவு.

ஷபே பராஅத் இரவுக்குள்ள தனித்துவமான சிறப்புக்கள்.

அதிகமான திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் "சூரா துகானின் இரண்டாவது வசனத்திற்கு(انا انزلناه فی ليلة مبارکة)விரிவுறையில் நிஸ்ஃபு ஷஃபான் இரவின் தனித்துவங்களை விவரித்துள்ளார்கள்.

#இவ்விரவுவில் அனைத்து காரியங்களும் நிர்ணயிக்கப்படுகிறது.

#இவ்விரவை அமல்களில் கழிப்பது சிறப்பானதாகும்.

#இவ்விரவுவில் அல்லாஹ்வின் அருள் மழைப்பொழிகிறது. 

#இவ்விரவுவில் "ஷஃபாஅத்"சிபாரிசுக்கு முக்கியத்துவமளிக்கப்படுகிறது. 

#இவ்விரவுவில் அடியார்களுக்கு பாவமன்னிப்பு எழுதப்படுகிறது.

(زمخشری، الکشاف، 4: 272 تا 273)

"ஷபே பராஅத்" என்கிற பெயர் காரணம்.

சங்கைக்குரிய இவ்விரவுக்கு "ஷபே பராஅத்"எனப்படுகிறது.இது ஃபார்ஸி வார்த்தையாகும்.شبஎன்றால் ஃபார்ஸியில் இரவு என்பதாகும்.براتஎன்றால் விடுதலை என்று பொருள்.

அரபியில் இதற்குلیلۃ البرات லைலதுல் பராஅத் எனப்படும்.

அறிஞப்பெருமக்களின் கருத்து;பாவங்களிலிருந்தும்,நரகிலிருந்தும் இவ்விரவில் விடுதலையளிக்கப்படுவதால் இதனை"لیلۃ البرات"எனப்டுகிறது. 

ஷபே பராஅத் குறித்து குர்ஆனில்...

மேலே குறிப்பிட்டதை போல சூரா துகானின் இரண்டாவது வசனத்தில் இவ்விரவைப் பற்றி கூறப்படுகிறது.

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏

நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.   (அல்குர்ஆன் : 44:3)

இவ்வசனத்தில் வரும் لیلۃ مبارکۃ "பரக்கத் பொருந்திய இரவு" என்றால் அது எந்த இரவு என்பதில் அறிஞப்பெருமக்களுக்கிடையில் இரு கருத்துக்கள் நிலவுகின்றன.

ழியாவுல் குர்ஆன் ضیاء القرآن எனும் தஃப்ஸீரின் ஆசிரியர், அவ்விரண்டு கருத்துக்களையும் விவரித்துள்ளார்கள். 

ஹழ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள், கதாதா(ரஹ்)அவர்கள் இன்னும் அதிகமான  முஃபஸ்ஸிரீன்களின் கருத்து:

இவ்வசனம் "லைலதுல் கத்ர்"யே குறிக்கின்றது.இதனை குர்ஆன் இறங்கிய இரவு "லைலதுல் கத்ர்"இரவு என்று  கத்ரு சூரா தெளிவுபடுத்துகிறது.

ஹழ்ரத் இக்ரிமா(ரஹ்)அவர்கள்,இன்னும் ஒரு பெருங்கொண்ட கூட்டத்தினரின்  கருத்து:

இவ்வசனம் நிஸ்ஃபு ஷஃபானையே குறிக்கின்றது.

கஸாயினுல் இர்ஃபான் خزائن العرفان எனும் நூலின் ஆசிரியர் எழுதுகிறார்கள்:

பரக்கத் பொருந்திய இரவு  لیلۃ مبارکۃ என்பதற்கு லைலதுல் கத்ரு இரவு மற்றும் நிஸ்ஃபு ஷஃபான் இரவு இரண்டையுமே சொல்வதற்கு இடம்பாடுள்ளது. 

இவ்விரவில் திருமறை குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூலிலிருந்து முதலாவது வானத்திற்கு ஒட்டுமொத்தமாக இறக்கி அருளப்பட்டது.பின்னர் ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாயிலாக 30 (முப்பது)வருடங்கள் சிறுக சிறுக தேவைக்கு ஏற்ப இறக்கியருளப்பட்டது.ஒட்டுமொத்தமாக திருமறை இறங்கிய இரவு என்பதால் இவ்விரவில் அல்லாஹ்வின் ரஹ்மத்தும்,பரக்கத்தும் பூமியில் இறங்குகின்றது.துஆ ஒப்புக்கொள்ளப்படுகிறது.

ஷபே பராஅத் குறித்து ஹதீஸில்...

قال النبي صلى الله عليه وآله وسلم: «إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا؛ فَإِنَّ اللهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ، أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ، أَلَا كَذَا، أَلَا كَذَا، حَتَّى يَطْلُعَ الْفَجْرُ» رواه ابن ماجه من حديث علي رضي الله عنه،

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் சொன்னார்கள்: ஷஃபான் மாதத்ததின் பகுதி(15ம் நாள் )இரவு வந்துவிட்டால் அதன் இரவிலே நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு வையுங்கள், காரணம் அல்லாஹுத்தஆலா சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் உலகின் வானத்திற்கு இறங்கி வந்து "எவரேனும் பாவமன்னிப்பு தேடுபவர் இருக்கிறாரா? அவரின் பாவத்தை நான் மன்னிப்பேன்,எவரேனும் ரிஜ்கை  கேட்பவர் இருக்கிறாரா? அவருக்கு நான் ரிஜ்கை அளிப்பேன்,எவரேனும் சிரமத்தில் அகப்பட்டவர் இருக்கிறாரா? அவரின் சிரமத்தை நான் நீக்குவேன், இவ்வாறே அல்லாஹ் (அன்றைய இரவு முழுவதும்)காலை ஃபஜ்ரு உதயமாகும் வரை கேட்டுக்கொண்டே இருப்பான். 

 (அறிவிப்பவர் :அலீ (ரலி)அவர்கள் (நூல் இப்னுமாஜா)

وخرج الإمام أحمد  من حديث عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم قال: "إن الله ليطلع إلى خلقه ليلة النصف من شعبان، فيغفر لعباده، إلا اثنين، مشاحن، أو قاتل نفس"، وخرجه ابن حبان في (صحيحه)  من حديث معاذ، مرفوعًا.

நபி ﷺஅவர்கள் சொன்னார்கள்:  நிச்சயமாக அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் பகுதி (15ம் நாள்)இரவில் தனது படைப்பினங்களின் பால் இறங்கி வந்து தனது அடியார்களின் (அனைவரின்)பாவங்களை மன்னிக்கிறான்,இரண்டு நபர்களை தவிர

1.குரோதம் கொள்பவன்

2.தற்கொலை செய்து கொண்டவன்"

அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் பின்ஆஸ் நூல்:இப்னு ஹிப்பான்.

ஹதீஸ்கலையில் ழஈபான ஹதீஸின் தரம் .

இன்று சிலர் பராஅத்துடைய இரவ பற்றி வந்த ஹதீஸ்கள் அனைத்தும் ழஈபானது இந்த இரவிற்கு தனிச்சிறப்பு கிடையாது என்று கூறி மக்களை இபாதத்தை விட்டும் தூரமாக்குவது தவறான காரியமாகும் ஏனெனில் இந்த இரவின் சிறப்புக்கள் பற்றி 15 ஸஹாபாக்களைத் தொட்டும் ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது அதிகமான கிதாபுகள் இந்த இரவின் சிறப்புப் பற்றி பேசியுள்ளது.

இதுபற்றி வந்த ஹதீஸ்களில் அதிகமானது ழஈபாக இருந்தாலும் அவைகளை ஒன்று சேர்க்கும் போது ஹஸனுடைய அந்தஸ்தைப் பெறும் என்பது ஹதீஸ் துறையில் ஈடுபடக்கூடியவர்களுக்குத் தெரியாதவிடயமல்ல.

இந்த ஹதீஸ்கள் ழஈப் என்று வைத்துக்கொண்டாலும் ழஈபான ஹதீஸ்களை சட்டங்களுக்கு ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாதே தவிர அமல்களின் சிறப்புக்களுக்கு ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பது முஹத்திஸீன்களிடத்தில் ஏகோபித்த கருத்தாகும் என இமாம் நவவி (ரஹ்) கூறியிருப்பதுடன் இந்த கருத்தை ஸலபுஸ்ஸாலிஹீன்களில் இமாம் ஸவ்ரி, இப்னு உயைனா இப்னு ஹன்பல் இப்னுல் முபாரக் இப்னு மஹ்தி இப்னு மஈன் (ரஹ்) போன்றோர்களும் கூறியுள்ளார்கள்.

அமல்களின் சிறப்புகளுக்கு ழஈபான ஹதீஸ்களை ஆதாரமாக எடுப்பதின் நிபந்தனைகளை தெளிவுபடுத்திய இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் இந்த இரவின் சிறப்பை தனது பத்ஹுல் பாரீயிலே பேசியுல்லார்கள்.

எனவே பராஅத்துடைய இரவு பற்றி வந்த ஹதீஸ்களில் சிலது ஸஹீஹ், சிலது ஹசன், சிலது ழஈப் எனவும் சில முஹத்திஸீன்கள் கூறியிருக்கும் போது இந்த இரவை தானதர்மங்கள், குர்ஆன் திலாவத் திக்ருகள் துஆகள் போன்ற வணக்கங்களால் உயிர்ப்பிப்பது எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஷபே பராஅத் இரவில் கண்மணி நாயகம்ﷺஅவர்கள்.

حديث عائشة رضي الله عنها. قالت: فقدتُّ النبي صلى الله عليه وسلم  ذات ليلة، فخرجت أطلبه، فإذا هو بالبقيع، رافعًا رأسه إلى السماء. فقال: "أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟" فقلت: يا رسول الله، ظننت أنك أتيت بعض نسائك. فقال: "إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا، فيغفر لأكثر من عدد شعر غنم كلب" (خرّجه الإمام أحمد والترمذي وابن ماجه) (2)، وذكر الترمذي عن البخاري أنه ضعفه.

அன்னை ஆயிஷா (ரலி)அறிவிக்கிறார்கள்:                  ஒருநாள் இரவு வேளையில் நபி (ஸல்) அவர்களை காணவில்லை,அவர்களைத் தேடி நான் சென்றேன், அப்போது அவர்கள் வானத்தை நோக்கி தங்களின் தலையை உயர்த்தியவர்களாக ஜன்னத்துல் பகீ என்ற இடத்தில் (இருக்கக் கண்டேன்) அப்போது அவர்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு அநீதம் செய்வர் என பயந்து விட்டாயா?"என என்னிடம் கேட்டார்கள்,அப்போது நான் "யா ரசூலல்லாஹ் உங்களின் மனைவியர்களில் (வேறு) சிலரின் வீட்டிற்கு வந்திருப்பீர்கள் என நான் நினைத்தேன்"என்று கூறினேன்.அப்போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்"நிச்சயமாக அல்லாஹுத்தஆலா ஷாபான் மாதத்தின் பகுதி (15ஆம் நாள்) இரவில் இவ்வுலகின் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தவர்களின் ஆடுகளின் (அடர்த்தியான) .ரோமங்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குகிறான். (நூல் :திர்மிதீ) 

ஷபே பராஅத் இரவில் (ஸஹாபாக்கள்) நபித்தோழர்கள்.

ஸய்யதுனா அனஸ் இப்னு மாலிக்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:சஹாபாப்பெருமக்கள், ஷஃபான் பிறையை கண்டுவிட்டால் குர்ஆன் திலாவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.தங்களின் பொருளின் ஸகாத்தை கணக்கிட்டு வரியவர்களுக்கும்,ஏழைகளுக்கும்  ரமலான் மாதத்தில் வழங்குவதற்காக தயாராக வைத்துக் கொள்வார்கள்.

அதிகாரிகள், கைதிகளை வரவழைத்து,தண்டனை உறுதியானவர்களுக்கு தண்டனை வழங்கிவிட்டு,மற்ற கைதிகளை விடுதலை செய்து விடுவார்கள்.

வியாபாரிகள், தங்களின் கடனை நிறைவேற்றிவிட்டு,தங்களுக்கு வரவேண்டிய கடன் நிலுவைத் தொகையினை வசூல் செய்து கொள்வார்கள்.

ரமலானின் பிறை தென்பட்டு விட்டால் சில சஹாபாக்கள் குளித்துவிட்டு இஃதிகாஃபில் அமர்ந்து விடுவார்கள்.   (غنية الطالبين، جلد1، ص246)

ஷபே பராஅத் இரவில் இமாமுனா ஹஸன்(ரலி)அவர்கள்.

இமாம் தாவூஸ் யமானி(ரஹ்)அவர்கள் கூறுகின்றார்கள்:நான்,இமாம் ஹஸன் இப்னு அலி(ரலி)அவர்களிடம் நிஸ்ஃபு ஷஃபான் குறித்தும்,அதில் அமல் செய்வது குறித்தும் கேட்டேன்.

அதற்கு இமாம்(ரலி)அவர்கள் பதில் கூறினார்கள்:நான் இந்த இரவை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்வேன்.

முதல் பகுதியில் எனது பாட்டனார் கண்மணி நாயகம்ﷺ அவர்களின் மீது ஸலவாத் ஓதுவேன்.இது அல்லாஹுத்தஆலாவின் கட்டளையின்படி அமல் செய்வதற்காகவாகும்.

اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.(அல்குர்ஆன் : 33:56)

இரவில் இரண்டாவது பகுதியில் "இஸ்திக்ஃபார்"பாவமன்னிப்புக் கோருதலில் ஈடுபடுவேன்,இதுவும் அல்லாஹ்வின் கட்டளையாகும்.

وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏

ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.(அல்குர்ஆன் : 8:33)

இரவின் மூன்றாவது பகுதியில் தொழுகையில் ஈடுபடுவேன்.இதுவும் இறைகட்டளையாகும்.

كَلَّا  لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩‏

(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.(அல்குர்ஆன் : 96:19)

நான் கேட்டேன் "இந்த இரவில் இது போன்ற அமல்களில் ஈடுபடக்கூடியவர்களுக்கு என்ன கூலிக்கிடைக்கும்." 

அதற்கு இமாம்(ரலி)அவர்கள் கூறினார்கள்: எனது தந்தை அலி(ரலி)அவர்கள் கண்மணி நாயகம்ﷺ அவர்கள் சொல்லக்கேட்டதாக சொன்னார்கள்

"எவர் ஷஃபான் பதினைந்தாம் நாள் இரவை அமல்களால் உயிர் பெறச்செய்வாரோ அவரை அல்லாஹ் مقربین இறைநெருக்கம் பெற்றவர்களில் எழுதிவிடுகிறான்.

இறைநெருக்கம் பெற்றவர்கள் குறித்து திருமறையில்...

فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِيْنَۙ‏

(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.(அல்குர்ஆன் : 56:88)

(توبه و استغفار، طاهرالقادری، ص:362، 361)

ஷபே பராஅத் இரவில் ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்)அவர்கள்.

அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்)அவர்கள் ஒரு தடவை சங்கைக்குரிய ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவில் வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தலையை உயர்த்தியபோது, ​​​​ஒரு பச்சை காகிதத்தைக் கண்டார்கள், அதன் ஒளி வானம் முழுவதும் பரவி இருந்தது ,அதில் எழுதப்பட்டிருந்தது:

هذه براءة من النار من الملک العزيز لعبده عمر بن عبدالعزيز.

சர்வவல்லமையுள்ள ஆட்சியாளன்,மிகைத்தோனாகிய  அல்லாஹ்வால் நரக நெருப்பிலிருந்து விடுபடுவதற்கான கடிதம் இது, அவருடைய அடியாரான உமர் பின் அப்துல் அஸீஸுக்கு வழங்கப்பட்டது.   (تفسير روح البيان، ج8، ص402)

மேற்கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளில் இந்த செய்தி சூரிய ஒளியை விடவும் தெளிவாக விளங்குகின்றது:

நிஸ்ஃபு ஷஃபானின் மகத்துவ மிக்க சங்கைக்குரிய இரவு அல்லாஹுத்தஆலாவின் புறத்திலிருந்து ரஹ்மத்துகளையும், பரக்கத்துக்களையும்,பாவ மன்னிப்பின் பாக்கியத்தையும் கொண்டு வருகிறது.

எனவே சங்கைப்பொருந்திய ஷபே பராஅத் இரவில் அல்லாஹ்வின் அருளையும்,பரக்கத்தையும் அடைந்துக்கொள்ள முயற்சிப்போமாக!

அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் ஷபே பராஅத் இரவின் நன்மைகளை அடைந்துக்கொள்ள தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



Wednesday 14 February 2024

ஜும்ஆ பயான் 16/02/2024

தலைப்பு : அன்னையர் தினம் FEB-22

” الجنة تحت أقدام الأمهات ”

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” 

தாய் என்ற ஒற்றை சொல்லின் பொருளாக அளவு கடந்த அன்பு மற்றும் எண்ணிலடங்காத தியாகம் என்று சொல்ல முடியும். ஒரு தாயானவள் ஒரு குழந்தையினை பெற்றெடுத்து அதனை பாராட்டி சீராட்டி பாதுகாத்து வளர்ப்பதற்காக தன்னையே அர்ப்பணிக்கின்றாள்.

தன் உதிரத்தையே பாலாக தந்து குழந்தைகளினை வளர்க்கின்றாள். வாழ்வில் பல வலிகளை தாங்கி கொண்டு தனது குழந்தைகள் நலனுக்காக உழைக்கின்ற உயர்ந்த தியாக செயலாக இதனை கூறமுடியும்.

தாய்க்கு முதலிடம்:

عن أبي هريرة رضي الله عنه قال: "جاء رجلٌ إلى رسول الله - صلى الله عليه وسلم- فقال: يا رسول الله، من أحق الناس بحسن صحابتي؟ قال: أمّك، قال: ثمّ من؟ قال: أمّك، قال: ثمّ من؟ قال: أمّك، قال: ثمّ من؟ قال: أبوك (متفق عليه).

 ‘மனிதர்களுள் யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?’ இது நபித்தோழர் ஒருவரின் வினா. ‘தாய்’ என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ‘அடுத்து யார்?’ என மீண்டும் அவர் கேட்க, ‘தாய்’ என்றே கூறினார்கள். மூன்றாவது முறையாக ‘அடுத்து யார்?’ என்று கேட்டபோதும் ‘தாய்’ என்றே பதில் வந்தது. ‘அடுத்து யார்?’ என நான்காம் முறையாக அவர் கேட்க ‘தந்தை’ என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ( அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, – புகாரீ ஷரீஃப்.)

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். 

தியாகத்திற்கு தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின் பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம் மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின் விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய தியாகம்!

குழந்தைக்கு நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம்அல்ல, நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய், தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி இருக்கிறது பாருங்கள்: ‘ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை’. சிலரது வாழ்வில் இது உண்மையும்கூட!

وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ 

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; (அல்குர்ஆன் : 31:14)

என்று பல இடங்களில் தாய் தந்தை இருவருக்கும் அடிபணிந்து நன்றி செலுத்தி வருமாறு கூறும் அல்லாஹ், தாயின் தகுதியை தந்தையைவிட ஒருபடி மேலாக உயர்த்திச் சொல்வதற்கான காரணத்தையும் கூறுகிறான்.

حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَ اِلَىَّ الْمَصِيْرُ‏

”அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக அவனைத் தன் கர்ப்பத்தில் சுமந்தாள், மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு வருடங்கள் பிடிக்கின்றன.’ (அல் குர்ஆன் 31:14)என்று தாய் அனுபவிக்கும் துன்பத்தை தெளிவாகக் கூறகிறான். ‘பலவீனத்தின் மேல் பலவீனமாக’ என்ற அல்லாஹ்வின் கூற்இன்றைய மருத்துவ வல்லுநர்கள் கூறும் விளக்கத்தை கவனியுங்கள்:

குழந்தை தன் எலும்புகள் வளரத் தேவையான ‘கால்சியம்’ சத்தை தாயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அதே போல் தனக்குத் தேவையான இரும்புச்சத்தை தாயின் இரத்தத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது.

தாயின் கருப்பைச் சுவர்கள் குழந்தைக்கு வேண்டிய இரத்தத்தை அதிகரிப்பதால் விரிவடைகின்றன. இதனால் தாயின் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகிறது. தலை சுற்றல்கூட வரும். தாயின் இதயம் கற்ப காலத்தில் மட்டும் மிக அதிகமாக இயங்குகிறது. இதனால் தாய்க்கு அதிக களைப்பு நெஞ்சுக்கரிப்பு கூட ஏற்படுகிறது.

குழந்தையின் எடை அதிகரிக்கும்போது தாயின் கீழ் முதுகில் வலி ஏற்படுகிறது. இதன் மூலம் தலைவலி, வயிற்று வலி, கால்வலி, பார்வையில் மந்த நிலை ஏற்படுகிறது.

பொதுவாக குழந்தை பெற்ற பின் தாய்மார்களில் 25 முதல் 50 சதவிகித தாய்மார்கள் மனநலக்குறைவு அடைகிறார்கள் என்கின்றனர் மருத்துவ மேதைகள். மெய் சிலிரக்க வைக்கும் தாயின் தியாகத்தை மறக்கலாமா?

பெற்றோரின் சிறப்பும் கடமையும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என சான்றோர்கள் வணங்கத் தகுதியானவர்களின் வரிசையில் முன்னிலையில் தாய் – தந்தை ஆகிய பெற்றோர்களையே முதன்மைப்படுத்தி உள்ளனர்.

இதன் மூலம் நாம் வாழும் உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்றோர்கள் எந்த அளவு முக்கியமானவர்கள் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோர் பொருத்தத்தால் ஏற்படுகிறது.

رِضى الربّ في رِضى الوالدِ، وسَخَطُ الرَبّ في سخطِ الوالدِ

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ருபின் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது." (சுபுலுஸ் ஸலாம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்[ரலி] அறிவிக்கிறார்கள். "தமது பெற்றோருக்கு நன்மை செய்து வருவோருக்கு அல்லாஹ் சுவனத்தின் இரு வாயில்களை திறந்து வைக்கிறான். அப்பெற் றோரில் ஒருவர் மட்டுமே இருந்து [அவருக்கு நன்மை செய்து வந்தால்] சுவனத்தின் ஒரு வாயிலை அல்லாஹ் அவருக்குத் திறந்து வைக்கிறான். அப்பெற்றோரில் ஒருவர் அப்பிள்ளை மீது கோபித்து விட்டால்) அவர் பொருந்திக்கொள்ளும் வரை அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்ளமாட்டான். அப் பெற்றோர் அவனுக்கு அநீதம் செய்தாலுமா? எனக் கேட்கப் அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆம் பெற்றோர் அவனுக்கு அநீதி செய்தாலும் சரியே என பதில் அளித்தார்கள். [அதபுல் முப்ரது-இமாம் புகாரி]

பொதுவாகவே பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு அநீதம் செய்யமாட்டார்கள். ஆயினும் யாராவது சிலர் அவ்வாறு பிள்ளைகளுக்கு அநீதம் செய்தாலும், பிள்ளைகள் அப்பெற் றோருக்குச் செய்யவேண்டிய மரியாதைகளையும் உபகாரங் களையும் செய்து வரவேண்டும். பதிலுக்குப் பதில் என்பது அவர்கள் விஷயத்தில் பொருந்தாது.

மேலும் பெற்றோர் மார்க்கத்திற்குப் புறம்பான தீய காரியங்கள் செய்பவர்களாக இருந்தால், அத்தீமைகளின் விளைவுகளையும், தண்டனைகளையும் அவர்களுக்கு அன்பாகவும், அறிவுப் பூர்வமாகவும், பிள்ளைகள் எடுத்துரைக்கவேண்டும். மாறாக அவர்களை துன்புறுத்தவோ, அவர்கள்மீது கடுஞ் சொற்களை வீசவோ கூடாது. மேலும் அவர்கள் அத்தீய செயல்களை விட்டு, திருந்தி வாழ வல்ல அல்லாஹுத்தஆலா விடம் பிரார்த்தனை செய்து வரவேண்டும்.

இறைத் தூதர் ஸைய்யிதுனா இப்ராஹீம் (அலை) அவர் களது தந்தை ஆஸர் என்பவர் இறைவனுக்கு இணைவைப்ப வராக இருந்தார். அதனைக் கைவிட்டு ஏக இறைவன் ஒருவனையே ஈமான் கொள்ளுமாறு அவருக்கு உபதேசம் செய் யும் நேரத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகுந்த மரியாதையையும் கனிவையுமே அவரிடம் கடை பிடித்தார் அவ்வுபதேசத்தின் பொழுது தந்தை கடினமான வார்த் தைகளை அள்ளி வீசியபொழுதும் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்

قَالَ سَلٰمٌ عَلَيْكَ‌ سَاَسْتَغْفِرُ لَـكَ رَبِّىْ اِنَّهٗ كَانَ بِىْ حَفِيًّا‏

 "எனதருமைத் தந்தையே! தங்கள் மீது இறை வணின் சாந்தி உண்டாகுக! எனது இரட்சகனிடம் தங்களுக்காக பிழை பொறுக்கத் தேடுவேன் என இதமாகவும் பொறுமையாகவும் கூறினார்கள்.

யுத்தம் செய்ய பெற்றோரின் அனுமதி.

யமன் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தார். அவரை முஹம்மத் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘யமன் நாட்டில் உமக்கு உறவினர்கள் எவராவது இருக்கின்றாரா?’ என வினவினார்கள். அப்போது அந்நபர் ‘ஆம் என் பெற்றோர் இருக்கின்றனர்’ என்றார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘நீர் இங்கு வருவதற்கு அவர்கள் அனுமதி வழங்கினாரா?’ எனக்கேட்டார். அச்சமயம் அந்நபர், ‘இல்லை.

நான் அனுமதி கேட்கவில்லையே!’ என்றார். அப்படியென்றால் நீர் திரும்பிச் செல்லும். இங்கு வரவென அவர்களிடம் (பெற்றோர்) அனுமதி கேளும். அவர்கள் அனுமதி அளித்தால் இங்கு வந்து ஜிஹாதில் கலந்துகொள்ளலாம். இல்லையெனில் அவர்களுக்குச் சேவை புரிந்த வண்ணம் இருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வீராக! எனக் கூறி அனுப்பியதாக அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல் : அபூதாவூத்)

பெற்றோரை ஏசுவது பெரும்பாவமாகும்.

பெரும்பாவங்களில் உள்ளது தாய் தந்தையரைத் திட்டுவது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன மாத்திரத்தில், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் தாய், தந்தையரைத் திட்டுவானா?” என்று நபித்தோழர்கள் வினவுகின்றார்கள். “ஆம்! இவன் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகின்றான். உடனே அவன் பதிலுக்கு இவனது தந்தையைத் திட்டுகின்றான். இவன் அவனுடைய தாயைத் திட்டுகின்றான். உடனே அவன் இவனது தாயைத் திட்டுகின்றான். (இது இவன் நேரடியாகத் திட்டியதற்குச் சமம்)” என்று பதிலளித்தார்கள். (நூல் : முஸ்லிம்)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

மௌலானா ஆஷிக் இலாஹி புலந்சஹ்ரி அவர்கள் தமது ஹுகூகுல் வாலிதைன்'' எனும் நூலில், தான் ஒரு சரித்திர யவத்தை கேள்விப்பட்டதாக எழுதுகிறார்கள். ஒருவர் தமது வயது முதிர்ந்த தந்தையை ஒரு போர்வையில் மூட்டை யாக கட்டி கிணற்றில் தள்ளுவதற்காக தூக்கிச் சென்றார். கிணற்றோரத்தில் அம்மூட்டையைவைத்து அவரைகிணற்றில் தள்ளுவதற்கு தயாராக இருந்த நேரத்தில் மூட்டைக்குள் கட்டப்பட்டிருக்கும் அவரது தந்தை மகனை விளித்து; மகனே! என்னை இக்கிணற்றில் தள்ளாதே! வேறு ஏதாவது ஒரு கிணற்றில் தளளிவிடு. ஏனெனில் இக்கிணற்றில்தான் முன்னொரு காலத்தில் நான் எனது தந்தையை தள்ளிவிட் டேன் என்றார். இதனைக்கேட்ட அவரது மகனின் உள்ளத்தில் ஒருவித மாற்றமும், திருப்பமும் ஏற்பட்டது. தன் தந்தை யின்மீது இரக்கம் பிறந்தது. பின்னர் மூட்டையி லிருந்து அவிழ்த்துவிட்டு கண்ணியமாக விட்டிற்கு அழைத்து சென்றார்.

ஒரு காலத்தில் அவர் தமது தந்தைக்குச் செய்த அதே சதிச் செயலை இன்று அவரது மகன் அவருக்குச் செய்யமுன் வந்து விட்டான். இருப்பினும், இறைவனின் நாட்டம் அம்மனிதரைக் காப்பாற்றி விட்டது.

தந்தையைப் பார்க்கிலும் தாயின் தனிச் சிறப்பு.

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு வந்து எனது அழகிய நடைமுறையைக்கொண்டு யாருக்கு அதிகம் உபகாரம் செய்ய கடமைப்பட்டுள்ளேன் என கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உமது தாய்க்கு" எனப் பகர்ந்தார்கள். பின்னர் யாருக்கு என வினவினார் அவர் அதற்கும் "உமது தாய்க்கு" என்றார்கள். பின்னர் யாருக்கு என்றார் அப்பொழுதும் உமது தாய்க்கு என்றார்கள். பின்னர் என்றார். அப்பொழுது உமது தந்தைக்கு என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி)

தந்தையைப் பார்க்கிலும் தாயின் சிறப்பு இரு காரணங் களால் உயர்ந்துள்ளது.

முதல் காரணம்:- 1) தாய் தனது வயிற்றில் பிள்ளையைச் சுமந்திருத்தல், பின்னர் அதனை வேதனையால் துடிதுடித்து பெற்றெடுத்தல், பின்னர் அதற்கு சில ஆண்டுகள் அமுதூட்டினாள். அதனை கண்ணுங்கருத்துமாய் வளர்த்தாள்

2. காரணம் 

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

‘‘தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன் தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (அல்குர்ஆன் 31 : 14)

கைருத் தாபீயின்.

தாயின் பணிவிடை காரணமாக உவைசுல் கரனீ (ரலி) நபிகளாரைக் காண வராததும் அவரை அவர்கள் புகழ்ந்துரைத்ததும் ஹஜ்ரத் உவைசுல் கரனீ (ரலி) அவர்கள் யமன் நாட் டைச் சார்ந்த "தாபிஈ" ஆவார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே அவர் இஸ்லாத்தில் இணைந்து விட்டார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீது அளவு கடந்த அன்பு பூண்டவராகவும், அவர்களை தம் கண்களால் கண்டு மகிழவேண்டுமென்ற பேராவலையுடையவராகவும் இருந்தார். ஆயினும் அவர் வயது முதிர்ந்த பலவீனமான தமது தாய்க்கு தொடர்ந்து பணிவிடை செய்துவரவேண்டிய வராயிருத்ததால், திரு நபி (ஸல்) காண யமனி லிருந்து திரு மதீனத்திற்கு அவரால் வர முடியவில்லை. தான் திருமதீனா சென்று விட்டால் தாயின் பணிவிடை தடை படுமே என்ற ஒரே காரணத்திற்காக அவ்வரிய பயணத்தை அவரால் மேற்கொள்ள இயலவில்லை. அவரது பல்வேறு சிறப்பியல்களுக்குச் சான்றாக அவருக்கு "கைருத் தாபீயின்"- நாயகத் தோழர்களுக்கு சிறந்த தோழர் - எனும் சிறப்புப் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.

 தாயன்பு.

 ஒரு பெண் தன் இரு பெண் மக்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து யாசகம் கேட்டு நின்றாள். அவளிடம் மூன்று பேரித்தங்கனிகளை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கொடுக்கின்றார்கள். அவற்றில் ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் தன் மகள்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள். அவற்றை அவர்கள் சாப்பிடுகின்றனர். தனக்குரியதை சாப்பிட அந்த பெண் எத்தனித்த போது அதையும் தங்களுக்குத் தரக்கேட்டு அந்தக் குழந்தைகள் அடம்பிடிக்கின்றன. எவ்வித முகச்சுழிப்புமின்றி சந்தோஷமாக அப்பழத்தை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவின் மனதைப்பெரிதும் பாதித்தது. இரவில் வீடு திரும்பிய நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த நிகழ்வைக்கூற, மெய்சிலிர்த்துப் போன நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவள் நேரடியாக சுவனம் செல்வாள்’ என்ற சுபச்செய்தியை தெரிவிக்கிறார்கள். ( அப்துல்லா இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு – முஸ்லிம் ).

” الجنة تحت أقدام الأمهات ”

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. நாம் அனைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்..

 

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜூம்ஆ பயான் 17/05/2024

ஹாஜிகளின் கவனத்திற்கு... ஹஜ் எனும் கடமை. ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில்  ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகள் போன்றே புனித குர்ஆன...